Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம்,மார்ச்.25: இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் மார்ச்,22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கினர். மேலும் 26ம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்துவது எனவும், ஏப்.8ம் தேதி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை ராமேஸ்வரம் தாசில்தாரிடம் ஒப்படைத்து தேர்தலை புறக்கணிப்பு செய்வது என முடிவு செய்து இருந்தனர்.
இந்தநிலையில் ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி ஆகியோர் ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று முன் தினம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், மீனவர்களின் கோரிக்கையை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றனர். மேலும் மீனவர்களையும், படகுகளையும் வரும் ஏப்.8ம் தேதிக்குள் விடுவிக்கவில்லை என்றால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என மீன்வளத்துறை அதிகாரியிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.